இந்த ஆண்டுக்கான ‘20 ஓவர் உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெற விருப்பம்’ - ஜோ ரூட் பேட்டி

இந்த ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணியில் நான் இடம் பெற வேண்டும் என்று முழுமையாக விரும்புகிறேன் என இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட் கூறியுள்ளார்.

Update: 2021-02-03 23:55 GMT
புதுடெல்லி, 

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட்டுக்கு, சென்னையில் நாளை தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி 100-வது டெஸ்ட் போட்டியாகும். இந்த நிலையில் ஜோ ரூட் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

என்னை பொறுத்தமட்டில் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு இங்கிலாந்து அணி வெற்றி வாகை சூடக்கூடிய வாய்ப்புள்ள வலுவான அணியாக செல்ல வேண்டும் என்பது தான் முக்கியமானதாகும். அந்த அணியில் நானும் இடம் பெற முடியும் என்று நம்புகிறேன். அப்படி அணியில் இடம் கிடைக்கவில்லை என்றாலும் அந்த அணியில் இடம் பெறும் வீரர்களுக்கு ஆதரவாக இருப்பேன். ஏனெனில் கடந்த ஒருநாள் (50 ஓவர்) உலக கோப்பையை வென்று இருக்கும் நாங்கள் இந்த கோப்பையையும் வென்றால் அது பெரிய சாதனையாகும். 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணியில் நான் இடம் பெற வேண்டும் என்று முழுமையாக விரும்புகிறேன். மூன்று வடிவிலான (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர்) போட்டியிலும் விளையாட ஆசைப்படுகிறேன். ஒவ்வொன்றும் வித்தியாசமான சவாலாகும். கடந்த சில வருடங்களாக எனக்கு அதிகமாக 20 ஓவர் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 20 ஓவர் போட்டிக்கான அணியில் இடம் பெற்று இருக்கும் வீரர்கள் அருமையான திறமை படைத்தவர்கள் என்பது எனக்கு தெரியும். அவர்கள் தங்களது வாய்ப்புக்கு முழுமையான தகுதி படைத்தவர்கள். ஆனால் எனக்கு 20 ஓவர் போட்டியில் வாய்ப்பு கிடைத்தால் அதிக ரன்கள் குவிக்க முயற்சிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்