புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு- குமரி மாவட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள்
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்து உள்ள வெங்கடாஜலபதி கோவிலில் விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் தீபாராதனையும் நடக்கிறது.;
பெருமாளுக்கு உகந்த தமிழ் மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. அதிலும் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் விரதம் இருப்பதற்கு ஏற்ற நாள் ஆகும். அதனால் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெரும்பாலானோர் விரதம் இருந்து பெருமாளை வணங்கி வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இதனால் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு பெருமாள் சிறந்த வரங்களைத் தந்து அந்த ஆண்டு முழுவதும் துன்பங்களை நீக்கி ஆனந்தம் தருவார் என்பதும் ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள் விரதம் இருந்தால் சனியின் தொல்லைகள் நீங்கும் என்பதும் ஐதீகமாகும்.
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை நாளை மறுநாள் (20-ந்தேதி) வருகிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும். பக்தர்கள் அதிக அளவு வருகை தருவார்கள் என்பதால், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி விவேகானந்தபுரம் விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்து உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவிலில் நாளை மறுநாள் காலை 6 மணிக்கு சுப்ரபாத தரிசனமும் அதைத் தொடர்ந்து விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் தீபாராதனையும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு தோமாலை சேவையும் அதைத்தொடர்ந்து சுவாமி பள்ளியறை எழுந்தருளும் நிகழ்ச்சியும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.
இதேபோல நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் நாளை மறுநாள் அதிகாலை நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு நிர்மால்ய பூஜையும் 9 மணி உற்சவ மூர்த்திக்கு அபிஷேகமும் தீபாராதனையும் மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.
மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பெருமாள் கோவில்களான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவில், ஆஸ்ராமம் திருவேங்கட விண்ணகப்பெருமாள் கோவில், மகாதானபுரம் நவநீத சந்தான கோபால கிருஷ்ண சாமி கோவில், கன்னியாகுமரி பாலகிருஷ்ண சாமி கோவில், சுசீந்திரம் இரட்டைத்தெரு குலசேகர பெருமாள் கோவில், தேரூர் புதுக்கிராமம் ஸ்ரீதேவி பூதேவி சமேத உதய மார்த்தாண்ட விண்ணகர எம்பெருமாள் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிருஷ்ணசாமி கோவில், வடசேரி பாலகிருஷ்ணன் சுவாமி கோவில், சிரமடம் பெருமாள் கோவில்,கோட்டார் வாகையடிதெருஏழகரம்பெருமாள் கோவில், வட்டவிளை தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், பார்த்திபபுரம் பார்த்தசாரதி கோவில், உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி நாளை மறுநாள் சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள் மற்றும்சிறப்பு அபிஷேகங்கள் அலங்கார தீபாராதனை போன்றவை நடக்கின்றனது.