நடிகை ரம்யாவுக்கு எதிரான அவதூறு வழக்கில் மேலும் 2 பேர் கைது
போலீசாருக்கு நடிகை ரம்யா பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளார்.;
பெங்களூரு,
கன்னட திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்யா. இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்திருந்தார். இதனால் நடிகை ரம்யாவை இன்ஸ்டாகிராமில் சிலர் அவதூறாகவும், தகாத வார்த்தையிலும், ஆபாசமாகவும் கருத்துகளை பதிவிட்டு இருந்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பெங்களூரு மத்திய மண்டல சைபர் கிரைம் போலீசில் ரம்யா குறித்து ஆபாச கருத்து வெளியிட்ட 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சித்ரதுர்கா மற்றும் கோலாரை சேர்ந்த தலா ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தனர். மேலும் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், நடிகை ரம்யா குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பெயர் கங்காதர் மற்றும் ஓபண்ணா என்பதாகும். கைதான 2 பேரில் ஒருவர் நடிகர் தர்ஷனின் ரசிகர் என்றும், மற்றொருவர் நடிகர் தன்வீரின் ரசிகர் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனக்கு எதிராக கருத்து வெளியிட்டவர்களை கைது செய்துள்ள போலீசாருக்கு நடிகை ரம்யா பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் கூறுகையில், நடிகை ரம்யாவுக்கு எதிராக அவதூறு கருத்து வெளியிட்டதில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். சிலரது சமூக வலைதள முகவரியை அளிக்கும்படி இன்ஸ்டாகிராமுக்கு சைபர் கிரைம் போலீசாரால் கடிதம் எழுதப்பட்டுள்ளது. தற்போது கைதானவர்கள் எந்த நடிகரின் ரசிகர் என்பது குறித்து விசாரணைக்கு பின்பு தான் தெரியும், என்றார்.