விமான விபத்து: உயிரிழந்தவர்களை அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனை
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தகவல் பெறுவதற்காக அகமதாபாத் அரசு மருத்துவமனை இரண்டு ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளது.;
அகமதாபாத்:
அகமதாபாத் விமான விபத்து குறித்து குஜராத் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தனஞ்சய் திவேதி கூறியதாவது:-
அகமதாபாத் விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் அரசு மருத்துவமனை மாணவர் விடுதி, ஊழியர்கள் குடியிருப்புகள் மற்றும் பிற குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. அந்தப் பகுதியில் வசிப்பவர்களும் காயமடைந்தனர். காயமடைந்த சுமார் 50 பேர் அகமதாபாத் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டவர்களின் உறவினர்கள் ஏதேனும் விசாரிக்க வேண்டுமானால், அகமதாபாத் அரசு மருத்துவமனை இரண்டு ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளது. அதன்படி எந்த உதவியாக இருந்தாலும், 6357373831 மற்றும் 6357373841 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
பி.ஜே. மருத்துவமனையில் டி.என்.ஏ சோதனைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பங்கள் மற்றும் நெருங்கியவர்கள், குறிப்பாக அவர்களின் பெற்றோர் மற்றும் குழந்தைகள், தங்கள் டிஎன்ஏ மாதிரிகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் அடையாளம் காணப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.