பெங்களூரு கூட்ட நெரிசல்; சித்தராமையா, டி.கே.சிவக்குமார் பதவி விலக வேண்டும் - பா.ஜ.க. விமர்சனம்
பெங்களூரு சம்பவம் அரசாங்கத்தின் அலட்சியத்தால் நிகழ்ந்த படுகொலை என ஷேசாத் பூனாவாலா குற்றம்சாட்டியுள்ளார்.;
பெங்களூரு,
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.18 ஆண்டுகளுக்குப் பின்னர், முதல்முறையாக பெங்களூரு அணி கோப்பையை வென்றுள்ளதால், அந்த அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் பெங்களூரு அணி வீரர்களுக்கு சின்னசாமி மைதானத்தில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. முன்னதாக கர்நாடக பேரவை மாளிகை முதல் சின்னசாமி மைதானம் வரை பெங்களூரு அணி வீரர்களின் பேருந்து பேரணி நடத்தப்பட்டது.
பெங்களூரு அணியை வரவேற்க மைதானத்தின் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். இதனிடையே, சின்னசாமி மைதானத்தின் 6-வது கேட் பகுதியில் அத்துமீறி பலர் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பொறுப்பேற்று மாநில முதல்-மந்திரி சித்தராமையா பதவி விலக வேண்டும் என பா.ஜ.க. விமர்சித்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது;-
"இது அரசாங்கத்தின் அலட்சியத்தால் நிகழ்ந்த படுகொலை. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் உள்துறை மந்திரி ஜி.பரமேஸ்வரா ஆகியோர் பதவி விலக வேண்டும்.
ஒருபுறம் மக்கள் உயிரிழந்துள்ளனர், மறுபுறம் வெட்கமின்றி கொண்டாட்டங்களை தொடர்கிறார்கள். இது குறித்து காங்கிரஸ் கட்சி எதுவும் பேசாதது ஏன்? அடிப்படை ஏற்பாடுகள் மற்றும் போலீஸ் படை அங்கு இல்லை. இதற்கு யார் பொறுப்பு?"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.