வேலை கிடைக்காத விரக்தி: பட்டதாரி வாலிபர் தற்கொலை

வேலை கிடைக்காதது குறித்து தனது நண்பர்களிடம் கூறி புலம்பி உள்ளார்.;

Update:2025-12-10 23:24 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் குட்டநிங்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆஞ்சநேயா (வயது 27). இவர் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இந்தநிலையில், கடந்த 4 ஆண்டுகளாக ஆஞ்சநேயா வேலை தேடி வந்தார். ஆனால், அவருக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை. இதனால் ஆஞ்சநேயா மனக்கவலையில் இருந்து வந்துள்ளார். மேலும், அவரது குடும்பத்தினர் ஆஞ்சநேயாவிடம் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருகிறாய் எனவும், எப்போது வேலைக்கு செல்வாய் எனவும் கேட்டு வந்துள்ளனர்.

இதனால் அவர் மேலும், மனக்கவலையில் இருந்துள்ளார். இதுகுறித்து தனது நண்பர்களிடம் ஆஞ்சநேயா கூறி புலம்பி உள்ளார். அவர்கள் ஆறுதல் கூறி வந்துள்ளனர். இந்தநிலையில், கடந்த சில நாட்களாக செலவிற்கு பணம் இல்லாமல் குடும்பத்தினர் ஆஞ்சநேயாவிடம் வெறுப்புணர்வுடன் நடந்து கொண்டனர். இந்தநிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆஞ்சநேயா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் வீடு திரும்பிய பெற்றோர் ஆஞ்சநேயா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதனர். அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஆஞ்சநேயா வீட்டிற்கு ஓடி வந்து பார்த்தனர். பின்னர் இதுகுறித்து பிளிச்சோடு போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

இதையடுத்து உயிரிழந்த ஆஞ்சநேயாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாவணகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆஞ்சநேயா 4 ஆண்டுகள் அலைந்தும் வேலை கிடைக்காத விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பிளிச்சோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்