காசா அமைதி ஒப்பந்தம்: அமெரிக்க அதிபரின் தலைமைத்துவத்தை வரவேற்கிறோம் - பிரதமர் மோடி
நீடித்த அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதற்கிடையில், ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள பணயக் கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.
பணயக் கைதிகள் அனைவரையும் மீட்டு, ஹமாஸ் அமைப்பை முழுவதுமாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என நெதன்யாகு சூளுரைத்தார். இருப்பினும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தினை டிரம்ப் முன்வைத்தார். இதற்கு நெதன்யாகு சம்மதம் தெரிவித்து உள்ளார் என கூறப்படுகிறது. டிரம்ப்பின் சமரச திட்டத்தை ஏற்க ஹமாஸ் இயக்கத்தினருக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதை பரிசீலிப்பதாக ஹமாஸ் தெரிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து, இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பு, டிரம்பின் 20 அம்ச திட்டங்கள் குறித்து மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், காசா அமைதி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிபரின் தலைமைத்துவத்தை வரவேற்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “காசாவில் அமைதியை கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில், ஜனாதிபதி டிரம்ப்பின் தலைமைத்துவத்தை நாங்கள் வரவேற்கிறோம்.
பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கான அறிகுறிகள், ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை குறிக்கின்றன. நீடித்த மற்றும் நியாயமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.