காசா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் இந்தியா பங்கேற்கிறது
இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.;
புதுடெல்லி,
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.
பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 48 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 28 பேர் ஹமாஸ் ஆயுதக்குழுவால் கொல்லப்பட்டுள்ளனர். எஞ்சிய 20 பேர் உயிருடன் உள்ளனர்.
அதேவேளை, பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் நோக்கிலும் காசா முனையில் இஸ்ரேல் தொடர்ந்து தரைவழி, வான்வழி தாக்குதலை நடத்தியது. 2 ஆண்டுகள் நடைபெற்ற இந்த போரில் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதனிடையே, பணய கைதிகள் விடுதலை, இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சி மேற்கொண்டார். அதன் பயனாக போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேல், ஹமாஸ் சம்மதம் தெரிவித்தன.
ஒப்பந்தப்படி காசா முனை மீதான தாக்குதலை இஸ்ரேல் நேற்று முன்தினம் நிறுத்தியது. இதனையடுத்து இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவருவது, காசா முனையில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், எகிப்தில் நாளை (அக்.13) நடைபெறும் காசா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பினை தொடர்ந்து பிரதமருக்கு பதில் வெளியுறவு இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட 20 நாடுகளின் தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.