திருமண தேவைக்காக உறவினரின் வீட்டில் ரூ.47 லட்சம் மதிப்புள்ள தங்கம், பணத்தை திருடிய நபர் கைது
காதலியை திருமணம் செய்தவதற்காக வாலிபர், உறவினரின் வீட்டில் திருடியுள்ளார்.;
பெங்களூரு,
கர்நாடகாவில் காதலியை திருமணம் செய்வதற்கு பணம் தேவைப்பட்டதால் உறவினரின் வீட்டில் ரூ.47 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் பணத்தை திருடிய 22 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரேயாஸ் (22 வயது) என்ற வாலிபர் தனது உறவினரான ஹரிஷ் என்பவருக்கு சொந்தமான கடையில் வேலை செய்து வந்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்த ஸ்ரேயாஸ், அவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டுள்ளது.
அதற்காக ஸ்ரேயாஸ், ஹரிஷின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஹரிஷின் வீட்டிற்குள் புகுந்த ஸ்ரேயாஸ் அங்கிருந்த தங்கம் மற்றும் பணத்தை திருடிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து ஹரிஷ் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தொடர்ந்து ஸ்ரேயாஸைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 416 கிராம் தங்கம் மற்றும் ரூ.3.46 லட்சம் பணத்தை மீட்டனர். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.47 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.