கர்நாடகா: 2 ஆண்டுகளாக சம்பளம் இல்லை; அரசு அலுவலகம் முன் தற்கொலை செய்த ஊழியர்
கலபுரகி நகரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, நூலக பணியாளர் ஒருவர் சம்பளம் கொடுக்காததற்காக, தற்கொலை செய்து கொண்டார்.;
பெங்களூரு,
கர்நாடகாவின் சாமராஜநகர் மாவட்டத்தில் ஹொங்கனூரு கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தண்ணீர் போடும் வேலையில் ஈடுபட்டு வந்தவர் சிகூசா நாயகா. 2016-ம் ஆண்டு முதல் இந்த வேலையில் இருந்த அவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக சம்பளம் எதுவும் தரப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த ஊழியர் அரசு அலுவலகம் முன் தற்கொலை செய்து கொண்டார்.
அதுபற்றிய தற்கொலை குறிப்பில், 27 மாத காலத்திற்கு சம்பளம் தரப்படவில்லை. அதனை தொடர்ந்து கேட்டு வந்தேன். ஆனால், அவர்கள் அலட்சியப்படுத்தி வந்தனர். ஜில்லா பஞ்சாயத்து தலைவரை கூட அணுகினேன். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. உடல்நல பாதிப்பை முன்னிட்டு, வேலையை ராஜினாமா செய்கிறேன் என்று கூட கூறி விட்டேன்.
ஆனால், எதுவும் நடக்கவில்லை. பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி ரமி கவுடா, கிராம பஞ்சாயத்து தலைவரின் கணவர் மோகன் குமார், மனதளவில் தொடர்ந்து துன்புறுத்தி வந்தனர். விடுமுறை கேட்டால், அதற்கு பதிலாக அந்த வேலையை பார்க்க வேறொரு நபரை அழைத்து வரும்படி கூறுவார்கள். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அலுவலகத்திலேயே இருக்க கூறுவார்கள்.
அவர்கள் இருவரின் தொடர் துன்புறுத்தலால் தற்கொலை செய்கிறேன் என அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, கலபுரகி நகரில் நூலக பணியாளர் ஒருவர் சம்பளம் கொடுக்காததற்காக, தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், மற்றொரு நபர் தற்கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.