பக்கத்து வீட்டுக்காரர்கள் மீது பொய் வழக்குகள்.. வக்கீலுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

இளம் பெண்ணின் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்தி போலி வழக்குகளைப் பதிவு செய்ததற்காக வக்கீலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.;

Update:2025-08-21 06:25 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த வக்கீல் பரமானந்த குப்தா என்பவருக்கும், பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பரமானந்த குப்தா, ஒரு இளம்பெண் மூலமாக பக்கத்து வீட்டுக்காரர்கள் மீது பொய் வழக்குகள் தொடர்ந்து உள்ளார்.

அந்த பெண்ணுடன் இணைந்து, தனது சொந்த பெயரில் 18 புகார்களையும், பெண் மூலம் 11 புகார்களையும் பதிவு செய்தார். இந்த பொய் புகார்களில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் அடங்கும்.

இந்த புகார்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. போலீசார் விசாரணையில் இளம்பெண் சுமத்திய அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என்று கண்டறியப்பட்டது. இந்த புகார்கள் தொடர்பாக கூடுதல் மாவட்ட கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் கடந்த 4-ந்தேதி அந்த இளம்பெண்ணுக்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கியது. இந்நிலையில் இந்த வழக்கில் மாவட்ட கோர்ட்டு, வக்கீல் பரமானந்த குப்தாவுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5.10 லட்சம் அபராதமும் விதித்தது. மேலும் அவர் வக்கீல் தொழில் செய்யவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்