மத்திய பிரதேசம்: 3 தொழிற்சாலைகளில் இரவில் திடீர் தீ விபத்து
கடந்த 8-ந்தேதி இரவிலும் பால்டா தொழிற்சாலை பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கில் இதேபோன்று தீ விபத்து ஏற்பட்டது.;
இந்தூர்,
மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் பால்டா தொழிற்சாலை பகுதியில் அமைந்த 3 தொழிற்சாலைகளில் இரவில் திடீரென தீப்பிடித்து கொண்டது. இதனை தொடர்ந்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால், ஆலைகளில் இருந்து பலர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால், பேரிடர் தவிர்க்கப்பட்டது.
இதுபற்றி தீயணைப்பு துறையின் காவல் துணை ஆய்வாளர் பி.எஸ். ஹட்டா கூறும்போது, தீயணைப்பு துறையின் துரித நடவடிக்கையால், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பால்டா அகர்வால் வளாகத்தில் இருந்த 3 தொழிற்சாலைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீப்பற்றிக்கொண்டு பல்வேறு இடங்களிலும் பரவியது.
ஆனால், அதிர்ஷ்டவசத்தில், யாரும் சிக்கி கொள்ளவில்லை. தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை என கூறினார். கடந்த 8-ந்தேதி இரவிலும் பால்டா தொழிற்சாலை பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கில் இதேபோன்று தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. இதுபற்றி உடனடியாக தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தீயணைப்பு துறையின் காவல் துணை ஆய்வாளர் சிவ நாராயண் சர்மா கூறும்போது, தகவல் அறிந்ததும், தீயை அணைக்க மொத்தம் 5 தீ வாகனங்கள் சென்றன. தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என கூறினார்.