மது அருந்துவதில் மத்தியபிரதேச பெண்கள் முதலிடம்: காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு
மது அருந்துவதில் மத்தியபிரதேச பெண்கள் முதலிடம் என்று காங்கிரஸ் தலைவர் சர்ச்சையான கருத்தை கூறினார்.;
போபால்,
மத்தியபிரதேச மாநிலத்தில் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்தியபிரதேச மாநில பெண்கள், நாட்டின் பிற பகுதிகளை விட அதிகமாக மது அருந்துகின்றனர். இதற்காக மத்தியபிரதேசத்துக்கு பதக்கம் அளிக்க வேண்டும். மத்தியபிரதேசத்தை வளமான மாநிலமாக மாற்ற கனவு காணும் பா.ஜனதாதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
போதைப்பொருளை ஒழிக்க பா.ஜனதா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நமது சகோதரிகளும், மகள்களும் போதைப்பொருளை பயன்படுத்த தொடங்கி விட்டனர். போதைப்பொருள் பயன்பாட்டிலும் மத்தியபிரதேச பெண்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். போதைப்பொருள் வர்த்தகத்தில் பஞ்சாப் போன்ற மாநிலங்களை மத்தியபிரதேசம் முந்தி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
ஜிது பட்வாரி கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு முதல்-மந்திரி மோகன் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜிது பட்வாரியின் கருத்து, பெண்களுக்கு எதிரான காங்கிரசின் குறுகிய மனப்பான்மையை காட்டுவதாகவும், இதற்காக காங்கிரஸ் தலைவர் கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மோகன் யாதவ் கூறியுள்ளார்.