வக்பு சட்டத்திருத்தம்: சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதற்காக மட்டுமே இந்த திருத்தங்கள் உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றிய வக்பு வாரிய சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், த.வெ.க. இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், தனி நபர்கள் சார்பிலும் என 72 ரிட் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது வழக்கில் காரசார வாதங்கள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கில், இடைக்கால தடை விதித்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.
இதன்படி வக்பு திருத்த சட்டத்தின்படி எந்த உறுப்பினர் நியமனத்தையும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கனவே பதியப்பட்ட வக்பு சொத்துக்கள் மீது எந்த புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வக்பு சட்டத்திருத்தம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதன்படி, வக்பு சட்டத்திருத்தம் என்பது வக்பு வாரியத்துக்கான சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பானது என்றும், சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதற்காக மட்டுமே இந்த திருத்தங்கள் உள்ளன என்றும், வக்பு சட்டத்திருத்தம் மத உரிமைகளை பாதிக்காது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.