தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 210 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீஸ் விசாரணை
தூத்துக்குடி, வைப்பார் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.;
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு பீடி இலை மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் வைப்பார் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் வைப்பார் கடற்கரையில் கண்காணித்தனர். அப்போது அங்கு வந்த ஒரு லாரியில் சோதனை நடத்தினர். அதில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 210 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நாஞ்சில்ராஜ் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் படகு மூலம் கஞ்சா பொட்டலங்களை இலங்கைக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதுகுறித்து தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.