கோவையில் போதை ஸ்டாம்புகள் விற்ற 5 பேர் கைது
கோவையில் சில வாலிபர்கள், பெங்களூரில் இருந்து கடத்தி வந்து கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை ஸ்டாம்புகளை விற்று வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.;
கோவை சரவணம்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் கணபதி பகுதியை சேர்ந்த ரேவந்த்(எ) அபி (வயது 23), ரத்தினபுரியைச் சேர்ந்த பெலிக்ஸ்பிரதீப்(25), வடவள்ளியைச் சேர்ந்த பிரதீஷ்(20) என்பதும், அவர்கள் பெங்களூரில் இருந்து கடத்தி வந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதை ஸ்டாம்புகளை விற்று வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் வர்ஷத்குமார்(22), ஹரிபிரசாத்(21) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.