50 சதவீத வரி விவகாரம்: திருப்பூரில் மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
உள்நாட்டில் உள்ள சிறு வணிகர்களின் நலனை மத்திய பாஜக அரசு கவனத்தில் கொள்வதில்லை என்று திமுக கூட்டணி தெரிவித்துள்ளது.;
கோப்புப்படம்
அமெரிக்க அரசின் 50 சதவீத வரிவிதிப்பால் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ள திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களைக் கண்டுகொள்ளாமல் கைவிட்ட பாஜக அரசுக்கு எதிராக மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மத சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் ஆ. அருணாச்சலம், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இந்திய பொருட்கள் இறக்குமதி மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்பால் கடும் நெருக்கடியையும், பெரும் பாதிப்பினையும் சந்தித்துள்ளது பின்னலாடை தொழிலின் மையமான திருப்பூர். கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதோடு லட்சக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
பணமதிப்பிழப்பு, முறையற்ற GST, கொரோனா பேரிடர் என்ற அடுத்தடுத்த தொடர் தாக்குதல்களால் நசிந்துபோயிருந்த திருப்பூர் பின்னலாடை தொழிலானது முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் புத்துயிர் பெற்று மீண்டும் பழைய நிலையை எட்டிப்பிடித்து ஆண்டுக்கு 45,000 கோடிக்கும் அதிகமான ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற தொடங்கியது. ஆனால் அதன் மீது விழுந்த பேரிடியாக அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு வந்து விழுந்தது. மத்திய பாஜக அரசின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏற்பட்ட மோசமான தோல்வியையே இந்த விளைவுகள் காட்டுகின்றன.
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கங்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, கடந்த 16-ம் தேதியே முதல்-அமைச்சர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் தமிழ்நாட்டின் ஜவுளித்துறை கிட்டத்தட்ட 75 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துவருகிறது என்பதை குறிப்பிட்டு, அமெரிக்க வரி விதிப்பின் காரணமாக, 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி இருந்தார்.
அமெரிக்க வரி விதிப்பால் ஏற்படப்போகும் பாதிப்புகளை முன்கூட்டியே முதல்-அமைச்சர் சுட்டிக் காட்டி நிவாரண நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொள்ள வேண்டும் என எடுத்துரைத்தும் எந்த நிவாரண நடவடிக்கையையும் மத்திய பாஜக அரசு எடுக்கவில்லை. மீண்டும் ஒருமுறை முதல்-அமைச்சர் 28.08.25 அன்று வலியுறுத்தியும் கிணற்றில் போட்ட கல் போல அமைதியாய் இருக்கிறது மத்திய பாஜக அரசு. ஆபத்து வர போகிறது என்று எச்சரித்தும் அதை எதிர்கொள்ள எந்த நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை ஆபத்து வந்த பின்னும் அதை பற்றி துளியும் கவலையின்றி அமைதியாய் இருக்கிறது மத்திய பாஜக அரசு.
பெரும் முதலாளிகளான அதானி அம்பானிக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடோடி வரும் மத்திய பாஜக அரசு, உள்நாட்டில் உள்ள சிறு வணிகர்களின் நலனை கவனத்தில் கொள்வதில்லை. குறிப்பாக தமிழ்நாட்டின் திருப்பூர் உள்ளிட்ட தொழில்நகரங்களைத் தொடர்ந்து புறக்கணிப்பது ஏன்? பாதிப்புகளை சரி செய்ய முன்வராமல் மவுனம் சாதிப்பது பின்னலாடை ஏற்றுமதியின் மையமான திருப்பூரை முடக்கும் அமெரிக்காவின் சூழ்ச்சிக்கு மத்திய பாஜக அரசும் துணை போகிறதோ? என்ற சந்தேகத்தை உண்டாக்குகிறது. அமெரிக்கா ஒருபுறம் வரி போட்டு நம்மை முடக்க நினைத்தால் மறுபுறம் வரி நிவாரணம் ஏதும் கொடுக்காமல் மத்திய பாஜக அரசும் நம்மை முடக்கி வருகிறது.
அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியாமல், திருப்பூர் பின்னலாடை தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில் உடனடி நிவாரண நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு எடுக்க வேண்டும். இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய மத்திய பாஜக அரசு வரி சலுகை உள்ளிட்ட நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். அமெரிக்க வரி விதிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் குரலாய் இருந்து மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்றும் போராடும்.
திருப்பூரைத் தொடர்ந்து புறக்கணித்து வரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், உடனடி நிவாரண நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொள்ள வலியுறுத்தியும் ‘மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி’ சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” வருகிற 02-09-2025 செவ்வாய்க் கிழமை அன்று காலை 10 மணியளவில் திருப்பூர் ரயிலடி அருகில் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.