28-ந் தேதி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 28-ந் தேதி பட்டமளிப்பு விழா நடக்கிறது.;
திருச்சி,
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக 40-வது பட்டமளிப்பு விழா வருகிற 28-ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணியளவில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற உள்ளது. இதில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கி பட்டங்களை வழங்குகிறார்.
விழாவில் பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதில் பெங்களூரு தேசிய தர மதிப்பீட்டு நிர்ணய குழுமத்தின் இயக்குனர் பேராசிரியர் கண்ணபிரான் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா பேருரையாற்ற உள்ளார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக துணைவேந்தர் குழு தலைவரும், கல்லூரி கல்வி இயக்கத்தின் ஆணையருமான சுந்தரவல்லி, பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) காளிதாசன் மற்றும் ஆட்சி குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.