நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்
22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.;
கோப்புப்படம்
தமிழ்நாடு சட்டசபையின் 4-ம்நாள் கூட்டம் இன்று காலை கூடியது. கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாக குற்றம்சாட்டினார். இதற்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-
நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து 4,000 லாரிகள், 10 ரெயில்வே வேகன்கள் மூலம் நெல் மூட்டைகள் கொண்டு செல்லப்படுகிறது. அதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர்ந்து நெல் கொள்முதல் செய்யப்படும் நிலையில் நாள் ஒன்றுக்கு தலா ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டை விட நாகையில் இந்த ஆண்டு 13 மடங்கு நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது. நெல் அதிகமாக விளையும் இடத்தில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் மூட்டைகள் வரை நெல் கொள்முதல் செய்கிறோம்.
நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம். 22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி தர வேண்டும். 22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம், அதிமுகவினர் அனுமதி பெற்று தாருங்கள். செறிவூட்டப்பட்ட அரிசிக்கு தற்போது வரை மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்தால் நெல் தேங்கும் நிலை ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.