அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - செல்வப்பெருந்தகை இரங்கல்
காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.;
சென்னை,
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது;-
சிவகங்கை மாவட்டத்தில் இன்று இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் பலர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த துயரமும், அதிர்ச்சியும் அடைந்தேன். ஒரு கணத்தில் பல குடும்பங்களின் வாழ்வை சிதறடித்த இந்த கொடிய விபத்து, தமிழ்நாடு முழுவதையும் மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இன்று எதிர்கொள்ளும் இழப்பு எந்த வார்த்தையாலும் ஆறுதல் அளிக்க முடியாதது. காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மக்கள் பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டிய அரசு போக்குவரத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் தொடர்ச்சியாக நிகழ்வது, பேருந்துகளில் பயணம் செய்யும் அனைவருக்கும் மிகுந்த அச்சத்தையும் கவலையையும் அளிக்கிறது.
இந்த விபத்திற்கான உண்மையான காரணம் உடனடியாக வெளிப்படுத்தப்பட்டு, இனி ஒரு உயிரும் இழக்காதவாறு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.