கிட்னி மோசடி வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் முறையாக வாதாடவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக-விற்கு 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;

Update:2025-11-04 13:21 IST

கோப்புப்படம்

சென்னை,

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் சிறுநீரக மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மோசடியில் ஈடுபட்டதாக இரண்டு தனியார் மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமத்தை இந்த அரசு ரத்து செய்தது. அந்த மருத்துவமனைகளில் ஒன்று மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமானது.

இந்நிலையில், திருச்சியிலுள்ள Cethar என்ற தனியார் மருத்துவமனை நிர்வாகம் மேற்படி உத்தரவை ரத்துச் செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர்கள் முறையாக வாதிடாததன் காரணமாக ஐகோர்ட்டு அரசின் உத்தரவை ரத்து செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இந்த உத்தரவைக் காரணம் காட்டி, திமுக சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான மருத்துவமனை நிர்வாகமும் ஐகோர்ட்டு மூலமாக தப்பித்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.

'குட்டி வாலைவிட்டு சூடு பார்க்கும் மந்தியின் கதையாக' தன் கட்சிக்காரரின் மருத்துவமனையை தப்பிக்க வைக்க, தமிழக மக்களின் நலனை புறந்தள்ளி இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள Failure மாடல் ஸ்டாலின் அரசை கண்டிக்கிறேன். சுயநல நோக்கோடு செயல்படும் திமுக-விற்கு 2026ல் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பேற்கும்போது, இந்த நிகழ்வில் யார் தவறிழைத்திருந்தாலும், அவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தக்க தண்டனை பெற்றுத்தரப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்