மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி; பெற்றோர் கடும் வாக்குவாதம் - கடலூரில் பரபரப்பு
புவனகிரி மருத்துவமனையில் இருந்து செவிலியர்களை வரவழைத்து மாணவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.;
கடலூர்,
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தின் கீழ் இன்று வழக்கம்போல் உணவு வழங்கப்பட்டது.
இதனிடையே, உணவில் ஒரு பல்லி கிடந்ததாக மாணவர் ஒருவர் ஆசிரியர்களிடம் தெரியப்படுத்தி உள்ளார். அந்த உணவை சுமார் 18 பேர் சாப்பிட்டுள்ளனர். அந்த மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு எதுவும் ஏற்படாத நிலையில், பள்ளி நிர்வாகத்தினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள புவனகிரி மருத்துவமனையில் இருந்து செவிலியர்களை வரவழைத்து மாணவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
அதே சமயம், இது குறித்து தகவலறிந்து பள்ளிக்கு வந்த பெற்றோர், அங்கிருந்த ஆசிரியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த 18 மாணவர்களும் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களது உடல்நலம் சீராக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.