பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பயின்ற பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கணித ஆசிரியரை பள்ளி நிர்வாகம் அண்மையில் பணியில் இருந்து நீக்கியது.;
துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஒரு பகுதியில் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் செய்துங்கநல்லூர் அருகே உள்ள புளியங்குளம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 33) என்பவர் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவர் சில மாதங்களுக்கு முன்பு அதே பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவி ஒருவரிடம் பழகியுள்ளார். அப்போது மாணவியிடம் ஆசை வார்த்தைகூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் பள்ளியில் காட்டுத்தீ போல பரவியது. இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக மணிகண்டனை பணிநீக்கம் செய்தது. இந்த நிலையில் மணிகண்டனால் பலாத்காரம் செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவிக்கு சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டது. பெற்றோர் அந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்தபோது மாணவி கர்ப்பமாக இருப்பதாக டாக்டர் கூறினார்.
இந்த தகவலை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தபோது, ஆசிரியர் மணிகண்டன் தான் கர்ப்பத்திற்கு காரணம் எனக்கூறி கதறி அழுதுள்ளார்.
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவியை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.