புதிய ஜி.எஸ்.டி. வரி விகிதத்தால் தமிழகத்திற்கு ரூ.9,750 கோடி இழப்பு?
புதிய ஜி.எஸ்.டி. வரி விகிதத்தால் தமிழகத்திற்கு ரூ.9,750 கோடி இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.;
சென்னை,
மத்திய அரசு, தற்போது இருக்கும் 5,12,18,28 என்ற ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை 5, 18 என்ற இரட்டை விகிதங்களை கொண்டுவர உள்ளது. இது தொடர்பாக அடுத்த மாதம் நடைபெறும் ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த புதிய ஜி.எஸ்.டி. வரி விகிதத்தால் தமிழகம் உள்பட ஒவ்வொரு மாநிலங்களுக்கும் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை இழப்பு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.
அதனை டெல்லில் நேற்று நடந்த மாநில நிதி மந்திரிகள் கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் தமிழகத்திற்கு வரும் ஜி.எஸ்.டி. வருவாயில் எவ்வளவு இழப்பு ஏற்படும்?. கடந்த 2024-25-ம் நிதியாண்டில் தமிழகத்தின் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ஆகும். அதில் மத்திய அரசும், மாநில அரசும் பாதி, பாதி பகிர்ந்து கொள்ளும்.
அப்படியென்றால் தமிழகத்திற்கு அதில் ரூ.65 ஆயிரம் கோடி கிடைக்கும். அதில் 15 சதவீதம் இழப்பு என்று எடுத்து கொண்டால் கூட ரூ.9,750 கோடி இழப்பு ஏற்பட்டு விடும். அதில் 20 சதவீதம் என்றால் ரூ.13 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டு விடும். ஒரு ஆண்டில் இவ்வளவு பெரிய இழப்பீடு ஏற்பட்டால் தமிழக அரசுக்கு கடுமையான நிதி சுமை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.