தொடங்கியது சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி: பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை என்ன?

தற்போதுள்ள வாக்காளர்களின், முன் அச்சிடப்பட்ட விவரங்களுடன் கூடிய கணக்கீட்டு படிவத்தினை இரட்டை பிரதிகளில் விநியோகிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-11-04 10:47 IST

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கி உள்ளது. ஆளுங்கட்சி உள்பட பெரும்பாலான கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், எந்தவித தவறும் நடக்காது என தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியின்போது பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விவரங்கள் வருமாறு:-

* வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இன்று முதல் (4-ந் தேதி) முதல் டிசம்பர் 4-ந் தேதி வரை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தற்போதுள்ள வாக்காளர்களின் முன் அச்சிடப்பட்ட விவரங்களுடன் கூடிய கணக்கீட்டு படிவத்தினை இரட்டை பிரதிகளில் விநியோகிப்பார்கள். அப்போது, அவர்களே வாக்காளர்கள் படிவத்தை நிரப்புவதற்கும் வழிகாட்டுவர்.

* கணக்கீட்டு நேரத்தில் எந்தவொரு வீடும் பூட்டப்பட்டிருப்பதை அல்லது மூடப்பட்டிருப்பதை வாக்குச்சாவடி நிலை அலுவலர் கண்டறிந்தால், அவர் கணக்கீட்டு படிவங்களை அந்த வீட்டிலேயே வைத்துவிட்டு வருவார். அந்த படிவங்களை பொதுமக்கள் நிரப்பி வைத்தால் போதுமானது.

* நிரப்பப்பட்ட படிவங்களை சேகரிக்க குறைந்தது 3 முறை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வருகை தருவார்கள்.

* தற்போதுள்ள வாக்காளர்களுக்கு முன்கூட்டியே நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவத்தைப் பதிவிறக்கம் செய்வதற்கும், நிரப்பப்பட்ட படிவங்கள் மற்றும் ஆவணங்களை ஆன்லைன் முறையில் பதிவேற்றுவதற்கும் https:// Voters.eci.gov.in, மற்றும் https://electors.eci.gov.in அல்லது ECINet mobie App மூலம் வசதி செய்யப்பட்டள்ளது. ஒவ்வொரு வாக்காளரும் இந்த படிவத்தை கணக்கெடுப்பு காலத்தில் வாக்காளர்கள் எந்தவொரு ஆவணத்தையும் தரவேண்டிய அவசியமில்லை.

* வாக்காளர் பதிவு அலுவலர்களால் தங்களது பெயர் முந்தைய சிறப்பு தீவிர திருத்த பட்டியலுடன் இணைக்கப்படாத காரணத்தினால் அறிவிப்பு வழங்கும் பட்சத்தில் மட்டுமே சுய சான்றளிக்கப்பட்ட கீழ்கண்ட ஆவணங்களுடன் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

வாக்காளர்களால், சுயச்சான்று அளித்து சமர்ப்பிக்க பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்கள்:

1. மத்திய அரசு/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனங்களின் வழக்கமான அடையாள அட்டை.

2. ஊழியர்/ஓய்வூதியம் பெறுபவருக்கு வழங்கப்பட்ட எந்தவொரு அடையாள அட்டை/ஓய்வூதிய ஆணை 01.07.1987-க்கு முன்னர் இந்தியாவில் அரசு/உள்ளூர் அதிகாரிகள்/வங்கிகள்/அஞ்சல் அலுவலகம்/ எல்.ஐ.சி/ பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட எந்தவொரு அடையாள அட்டை/சான்றிதழ்/ஆவணம்

3. தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்.

4. பாஸ்போர்ட்

5. அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள்/பல்கலைக்கழகங்களால் வழங்கப்பட்ட மெட்ரிகுலேஷன்/கல்விச் சான்றிதழ்

6. தகுதிவாய்ந்த மாநில அதிகாரியால் வழங்கப்பட்ட நிரந்தர வசிப்பிட சான்றிதழ்

7.வன உரிமைச் சான்றிதழ்

8. ஓ.பி.சி/எஸ்.சி/எஸ்.டி அல்லது தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட எந்தவொரு சாதிச் சான்றிதழ்

9.தேசிய குடிமக்கள் பதிவேடு

10. மாநில/உள்ளூர் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவேடு

11. அரசாங்கத்தால் வழங்கப்படும் எந்தவொரு நிலம்/வீடு ஒதுக்கீட்டுச் சான்றிதழ்

12. ஆதார்

* வாக்குச்சாவடி நிலை அலுவலர் கணக்கெடுப்பு படிவங்களை வீடுதோறும் சென்று விநியோகம் செய்து முடித்த நிலையில், மீண்டும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வாக்காளர்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவத்தின் நகலை சேகரிப்பர். வாக்குச்சாவடி நிலை அலுவலர் கணக்கீட்டு படிவத்தின் ஒரு நகலை அவருடன்/அவளுடன் தேவையான ஆவணங்களுடன் வைத்திருப்பர். மேலும் விண்ணப்பதாரரால் தக்கவைக்கப்பட வேண்டிய கணக்கீட்டு படிவத்தின் மற்ற நகலில் படிவம் மற்றும் வண்ண புகைப்படம் கிடைத்ததற்கான ஒப்புதலை வழங்குவார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்