தூத்துக்குடி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை வழக்கு- 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
தூத்துக்குடி, தட்டார்மடம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை முன்விரோதம் காரணமாக 4 பேர் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.;
தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் இடைச்சிவிளை பகுதியைச் சேர்ந்த மயிலையா மகன்களான முருகேசன் (வயது 35), வயணபெருமாள்(48), ஆதிலிங்கராஜன்(27) ஆகியோரை கடந்த 3.6.2001 அன்று முன்விரோதம் காரணமாக இடைச்சிவிளை பகுதியில் வைத்து அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் தட்டார்மடம், இடைச்சிவளை பகுதியைச் சேர்ந்தவர்களான மைக்கேல் மகன் பீட்டர்ஜேசுமரியான்(64), ஜேசுமரியான் மகன் சுதாகர்(51), சிலுவைப்பிச்சை மகன்களான குருஸ்முத்து(எ) அந்தோணிராஜ்(72), ராமர்(எ) செல்வராஜ்(71) ஆகியோரை தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவன் நேற்று (4.8.2025) குற்றவாளிகளான பீட்டர்ஜேசுமரியான், சுதாகர், குருஸ்முத்து(எ) அந்தோணிராஜ், ராமர்(எ) செல்வராஜ் ஆகிய 4 பேருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20,000 அபராதமும், மேலும் தலா மூன்று வருடங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தட்டார்மடம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அனிதா மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த்கேப்ரியல்ராஜ், விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு சுடலைமுத்து ஆகியோரையும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.