இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-09-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான இன்று சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது, நீல நிற பவித்திர நூல், கிராம்பு, துளசி, உலர் பழங்கள் மற்றும் ரோஜா பூக்கள் கொண்டு கீரிடம், மாலைகளால் அலங்கரிக்கப்பட்டன. இந்த நிகழ்வில், பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், இளநீர் மற்றும் பிற மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சென்னை அருகே எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த தொழிலாளர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் சிறுமிகளைக் கடவுளாகப் போற்றப்படும் பாரம்பரியத்தில், இந்தாண்டு 2 வயது சிறுமி ஆர்யதாரா ஷக்யா வாழும் தெய்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்துக்கள், பௌத்தர்கள் இச்சிறுமியை கடவுளின் அவதாரமாக வழிபடுவர். நேபாளத்தில் தலேஜு பவானி திருக்கோயிலில் பருவமடையாத சிறுமிகளை வழிபாட்டுத் தெய்வமாகப் போற்றும் முறை கடைபிடிப்பு. இச்சிறுமியைத் தேர்வு செய்வதில் மனம், உடல் வலிமை என பலதரப்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
போரால் சிதைந்துள்ள காசாவை மறுசீரமைக்கும் பொறுப்பு இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேரிடம் கொடுக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரம்ப்பின் 20 அம்ச திட்டங்களுக்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டால், ஒரு சர்வதேச இடைக்கால அமைப்பு உருவாக்கப்பட்டு காசா நிர்வகிக்கப்படும். டோனி பிளேர் தலைமையில் அமைக்கப்பட்டால் அதில் பல நாடுகள் உதவிக்கரம் நீட்டக்கூடும் என கூறப்படுகிறது.
கரூர் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரிடம் நலம் விசாரித்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரணத் தொகை ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கினார்.
தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு
த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து கலவரத்தை தூண்டும் வகையில் சமூகவலைதளத்தில் பதிவிட்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறையால் தாம்பரம் ரெயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம். தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களின் பொதுப்பெட்டிகளில் முண்டியடித்து மக்கள் ஏறினர்.
ஜி.வி. பிரகாஷ்- சைந்தவிக்கு விவாகரத்து வழங்கப்பட்டது
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் -சைந்தவிக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனிடையே குழந்தையை சைந்தவி கவனித்து கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ஜி.வி. பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தவெகவினர் முதலில் கேட்ட இடத்தில் அமராவதி ஆற்றுப் பாலமும், பெட்ரோல் பங்க்கும் உள்ளது, இரண்டாவதாக உழவர் சந்தை பகுதி மிகக் குறுகிய இடம் என்பதால் 5,000 பேர் மட்டுமே திரள முடியும். வேலுசாமிபுரம் ஒதுக்கீடு செய்வதாகக் கூறியபோது அதனை தவெகவினர் ஏற்றுக் கொண்டனர் என கரூர் அசம்பாவித நிகழ்வு தொடர்பாக தமிழ்நாடு ஊடகத்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் விளக்கம் அளித்தார்.
கரூர் தவெக தேர்தல் பரப்புரையில் என்ன நடந்தது என்பது குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் காணொளி வெளியிடப்பட்டுள்ளது. சதி நடந்திருப்பதாக தவெக தரப்பு கூறி வரும் நிலையில் விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தரப்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.