விநாயகர் சிலைகள் ஊர்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
சென்னையில், இந்து அமைப்புகள் சார்பில் 1,519 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.;
சென்னை,
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 27-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில், இந்து அமைப்புகள் சார்பில் 1,519 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது. இந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், திருவான்மியூர் பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:-
* திருவல்லிகேணியில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை வரை வாகன போக்குவரத்து மெதுவாக இருப்பதால், காந்தி சிலை, ஆர்.கே.சாலை சந்திப்பிலிருந்து (வலது புறம் திரும்பி), வி.எம்.தெரு, லஸ் ஜங்சன், அமிர்தாஞ்சன் சந்திப்பு, டிசில்வா சாலை, வாரன் சாலை, டாக்டர் ரங்கா சாலை (வலது புறம் திரும்பி), பீமண்ண கார்டன் சந்திப்பு, சி.பி.ராமசாமி சாலை (இடது புறம் திரும்பி), செயிண்ட் மேரிஸ் சந்திப்பு, காளியப்பா சந்திப்பு, சீனிவாசா அவென்யூ (இடது திருப்பம்), ஆர்.கே.மடம் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
* அடையாறில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஆர்.கே.மடம் சாலை, திருவேங்கடம் தெரு (இடது புறம் திரும்பி), வி.கே.ஐயர் சாலை சந்திப்பு, தேவநாதன் தெரு, செயிண்ட் மேரிஸ் சாலை (வலது புறம் திரும்பி), ஆர்.கே.மடம் சாலை (இடது புறம் திரும்பி), தெற்கு மாட சந்திப்பு, வெங்கடேச அக்ரஹாரம் சாலை (இடது புறம் திரும்பி), கிழக்கு அபிராமபுரம், லஸ் அவென்யூ, பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, டாக்டர் ஆர்.கே.சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
* சிலை ஊர்வலம் ரத்னா கபே சந்திப்பை கடக்கும்போது, ஜாம்பஜார் போலீஸ் நிலையத்தில் இருந்து ரத்னா கபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் ஜானி ஜான்கான் ரோடு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
* சிலை ஊர்வலம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையை கடக்கும்போது, ஐஸ்ஹவுஸ் சந்திப்பில் இருந்து ரத்னா கபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் பெசன்ட் ரோடு-காமராஜர் சாலை வழியாக திருப்பிவிடப்படும் அல்லது இடதுபுறம் ஜி.ஆர்.எச். சந்திப்பை நோக்கி சென்று தங்களின் இலக்கை அடையலாம்.
* விநாயகர் சிலை கரைக்கும் இடங்களை சுற்றி சுமார் 10 கி.மீ சுற்றளவிற்கு எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை. இவ்வாறு போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.