கானாவில் பிரதமர் மோடிக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ அணிவகுப்பு மரியாதை
கானாவை தொடர்ந்து, டிரினிடாட் அண்டு டுபாகோ நாட்டுக்கு ஜூலை 3 மற்றும் 4 ஆகிய 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்.;
ஆக்கரா,
பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக அவர் தனி விமானத்தில் இன்று கானாவுக்கு புறப்பட்டு சென்றார்.
கானா நாட்டின் ஜனாதிபதி ஜான் திராமணி மகாமா அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி விமான நிலையத்தில் சென்றிறங்கியதும் அவருக்கு, அந்நாட்டு முறைப்படி சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அவரை ஜனாதிபதி மகாமா சிறப்பான முறையில் வரவேற்றார். இதனை தொடர்ந்து பிரதமருக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த பயணத்தில், வரலாற்று தன்மை கொண்ட உறவுகளை ஆழப்படுத்தும் நோக்கில் இரு தலைவர்களும் தங்களுடைய பார்வைகளை பரிமாறி கொள்வார்கள். முதலீடு, எரிசக்தி, சுகாதாரம், பாதுகாப்பு, திறன் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய விசயங்கள் பற்றியும் ஆலோசிக்கப்படும் என தெரிவித்து உள்ளது.
கானாவில் ஜூலை 2 மற்றும் 3 ஆகிய நாட்களில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார். 30 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவரின் கானாவுக்கான முதல் பயணம் இதுவாக அமையும். பிரதமர் மோடிக்கும் கானாவுக்கான முதல் பயணம் இதுவாகும்.
தொடர்ந்து, டிரினிடாட் அண்டு டுபாகோ நாட்டுக்கு 2 நாட்கள் (ஜூலை 3 மற்றும் 4) சுற்றுப்பயணம் செய்கிறார். அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.