ஐதராபாத் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஜெர்மனியில் அவசரமாக தரையிறக்கம்
வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது சோதனைக்கு பிறகு உறுதி செய்யப்பட்டது.;
பெர்லின்,
ஜெர்மனியின் பிராங்க்புர்ட் விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் நோக்கி புறப்பட்ட 'லுப்தான்சா' நிறுவனத்தின் 'போயிங் 787-9 டிரீம்லைனர்' ரக விமானத்திற்கு சமூக வலைதளம் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் மீண்டும் பிராங்க்புர்ட் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் விமானம் முழுவதையும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். இதில் ஆபத்தான பொருள் எதுவும் கண்டறியப்படாத நிலையில், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பயணிகளை மீண்டும் ஏற்றிக்கொண்டு, சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதாக விமானம் புறப்பட்டது. அந்த விமானம் இன்று நண்பகல் 1.20 மணிக்கு ஐதராபாத் வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.