முன்மொழிந்தவர்கள் கையெழுத்திடவில்லை என வாதம்: காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்படும் அபாயம்

முன்மொழிந்தவர்கள் வேட்புமனுவில் கையெழுத்திடவில்லை என கூறுவதால் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Update: 2024-04-20 15:27 GMT

காந்திநகர்,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தல் நேற்று (19-ம் தேதி) நடைபெற்றது. எஞ்சிய 6 கட்ட தேர்தலும் வரும் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

குஜராத்தில் மொத்தமுள்ள 26 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் வரும் 7ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது.

இதில், குஜராத்தின் சுரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலீஷ் கும்பானி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கலின்போது 3 பேர் முன்மொழிந்துள்ளனர்.

இந்நிலையில், நிலீஷ் கும்பானி வேட்புமனு தாக்கலின்போது முன்மொழித்த 3 பேரும் தாங்கள் வேட்புமனு தாக்கல் மனுவில் கையெழுத்திடவில்லை என கூறியுள்ளனர். இதனால், நிலீஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதே 3 பேரும் நிலீஷ் கும்பானியின் மாற்றுவேட்பாளரான சுரேஷ் பட்சாலாவுக்கு வேட்புமனுவில் முன்மொழிந்துள்ளனர். ஆனால், சுரேஷ் பட்சாலாவின் வேட்புமனுவிலும் தாங்கள் கையெழுத்திடவில்லை என அந்த 3 பேரும் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதனால், காங்கிரஸ் வேட்பாளர்களின் வேட்புமனு நிராகரிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது பா.ஜ.க.வின் வேலை என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த சம்பவத்தால் குஜராத் தேர்தல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்