பா.ஜ.க.வுடன் ராமதாஸ் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கும் கடமை, தமிழ்நாட்டுக்கு உண்டு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2024-03-29 14:08 GMT

தர்மபுரி,

தர்மபுரி, கிருஷ்ணகிரி தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இந்தியா என்ற அழகிய நாட்டை பாஜக அழித்து விடுமோ என்ற அச்சத்தோடு அதை தடுக்க அனைத்து ஜனநாயக சக்திகளும், இந்திய நாட்டு மக்களும் களம் கண்டுள்ள ஜனநாயக போர்க்களம் இந்த தேர்தல். இந்தியா கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்துக்கும், தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கும், இளைய தலைமுறைக்கும், எதிர்கால சந்ததிக்கும் அளிக்கக்கூடிய வாக்கு.

இந்தியாவில் சமூக நீதி நீடிக்க வேண்டுமென்றால், பா.ஜ.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். சமத்துவம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் கட்சி பாஜக. பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கும் கடமை, தமிழ்நாட்டுக்கு உண்டு.

சமூக நீதி பேசும் பாமக நிறுவனர் ராமதாஸ் சமூகநீதிக்கு எதிரான பாஜகவுடன் எதற்கு கூட்டணி அமைத்தார் என்பது தங்கமலை ரகசியம் எல்லாம் ஒன்றுமில்லை. சமூக நீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி?. பாஜகவுடன் கூட்டணி வைத்ததை பாமகவினரே ஜீரணிக்க முடியாமல் உள்ளனர். பாமகவின் கொள்கைக்கு முற்றிலும் நேர்மறையான கொள்கை கொண்டதுதான் பாஜக. மனமில்லாமல் பாஜகவுடன் பாமக கூட்டணி ஏன் அமைத்தது என்பது அக்கட்சியினருக்கே தெரியும்.

மாநில அரசுக்கு சர்வேதான் எடுக்க முடியுமே தவிர சென்செஸ் எடுக்க முடியாது. மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்குதான் உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ராமதாசுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா உறுதி கொடுத்தாரா?.

பழங்குடியின, பட்டியலின மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது திமுக அரசு. அதிமுகவும், பாமகவும் மாறி மாறி வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக குற்றம் சொல்கின்றனர். வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக திமுக போராடியது. பிரதமர் மோடி எஜமானர் அல்ல; மக்கள்தான் பிரதமருக்கு எஜமானர்கள்.

ஒருமுறையாவது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மக்களை சந்திக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட பணம் இல்லை என நிர்மலா சீதாராமன் சொல்கிறார். தேர்தல் பத்திரம் மூலம் கிடைத்த பணத்தை தர முடியாது என பாஜக கூறிவிட்டதா?. மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பது தெரிந்து நிர்மலா சீதாராமன் தப்பித்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்