சிம்மம் - குருப்பெயர்ச்சி பலன்கள்


சிம்மம் - குருப்பெயர்ச்சி பலன்கள்
தினத்தந்தி 21 April 2023 6:45 PM GMT (Updated: 21 April 2023 6:49 PM GMT)

22-04-2023 முதல் 01-05-2024 வரை

(மகம், பூரம், உத்ரம் 1-ம் பாதம் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: ம, மி, மு, மெ, மோ, ட, டி, டு, டே உள்ளவர்களுக்கும்)

ஒன்பதில் வந்தது குருபகவான்; பொன்பொருள் குவியும் இனிமேல்!

சாதனையாளர்கள் வரிசையில் இடம்பிடிக்க துடிக்கும் சிம்ம ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 22.4.2023 அன்று உங்கள் ராசிக்கு 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். சுமார் ஓராண்டு காலம் அங்கு வீற்றிருந்து அதன் பார்வையால் உங்களுக்கு கிடைக்கு வேண்டிய பாக்கியங்களை வழங்குவார். '9-ல் குரு வந்தால் ஒளிமயமான எதிர்காலம் அமையும்' என்பார்கள். கண்டகச்சனியின் ஆதிக்கம் இருந்தாலும் கனவுகள் நனவாக அவரது பார்வை கைகொடுக்கும். 'ஐந்தும், ஒன்பதும் மிஞ்சும் பலன் தரும்' என்பார்கள்.

குரு இருக்கும் இடத்தின் பலன்!

குரு பகவான் உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். பூர்வ, புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான குரு பகவான் இப்பொழுது பாக்கிய ஸ்தானத்திற்கு வருகின்றார். நினைத்ததெல்லாம் நிறைவேறும் விதத்தில் சாதகமான பலன்களை அள்ளி வழங்கப்போகின்றார். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இதுவரை ஏற்பட்ட பிரச்சினைகள் ஒவ்வொன்றாக இனி அகலும்.

தேவகுரு ஒன்பதில்வந்தால்

தேகநலன் சீராகும்!

ஆவல்களும் நிறைவேறும்

ஆதரவுக் கரம்கூடும்!

நாவசைத்தால் கேட்பார்கள்

நாடெல்லாம் புகழ்பரவும்!

தாமதித்த திருமணமும்

தயக்கமின்றி நடந்தேறும்!

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது வேகமாகப் பணிபுரிய உடல் ஒத்துழைப்புச் செய்யும். மோதல்கள் நிறைந்த வாழ்க்கையில் முத்தான பலன்கள் இனி கிடைக்கும். சாதனையாளர்கள் பட்டியலில் உங்கள் பெயரும் இடம் பெறலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற இன்ப அதிர்ச்சிகள் ஏராளமாகக் கிடைக்கும் நேரம் இது.

வெற்றிகளைக் குவிக்கும் வியாழனின் பார்வை!

எத்தனை கிரகங்கள் பார்த்தாலும் குருவின் பார்வைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதன் முத்தான பார்வை 1, 3, 5 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைந்து நல்ல பலன்களை அள்ளி வழங்கப்போகின்றது. குறிப்பாக உடல்நலம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். தொழில் வெற்றிநடை போடும். பிறரைச் சார்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இனித் தனித்து இயங்க முற்படுவர். காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு செயல்படுவர்.

குருவின் பார்வை 3-ம் இடத்தில் பதிவதால் வெற்றிகள் ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே தொழில், உத்தியோகம், பொதுநலம், அரசியல் போன்றவற்றில் நீங்கள் நினைத்தவை நடைபெறும். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன் சுமை குறைய புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடைபெறும் சுபகாரியங்களை முன்னின்று நடத்தி வைப்பீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் அகலும்.

குருவின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் புனிதமடைகின்றது. இதன் பலனாக உங்களுக்கு யோகங்கள் அனைத்தும் படிப்படியாக வந்து சேரப்போகின்றது. பிள்ளைகளுக்கு படிப்பிற்கேற்ற வேலை கிடைத்து வருமானமும் சிறப்பாக அமையப் போகின்றது. ஆன்மிகப் பணியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். அதிகாரப் பதவிகள் கூட ஒருசிலருக்கு கிடைக்கலாம். அசையாச் சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள்.

நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்!

அசுவதி நட்சத்திரக் காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:

குரு பகவான் அசுவதி நட்சத்திரக் காலில் கேது சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். உங்களோடு பகை பாராட்டியவர்கள் நேச மனப்பான்மையுடன் நெருங்கிப் பழகுவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். ஊர்மாற்றங்கள் விரும்பத்தக்கதாக அமையும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து லாபத்தைப்பெற வழிவகுத்துக் கொடுப்பர். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.

பரணி நட்சத்திரக் காலில் குருபகவான் சஞ்சரிக்கும் பொழுது:

குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ம் இடத்தில் பரணி நட்சத்திரக் காலில் சுக்ரன் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது நிறைய சுபச்செய்திகள் வந்து கொண்டேயிருக்கும். விவசாயம், கால்நடை வளர்ப்பிலும் ஆர்வம் காட்டுவீர்கள். கணிசமான லாபம் கைகளில் புரளும். தொழில் போட்டிகள் அகலும். அரசாங்க வழியில் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த தேக்கநிலை அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமையை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.

கார்த்திகை நட்சத்திரக் காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:

குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ம் இடத்தில் கார்த்திகை நட்சத்திரக்காலில் சஞ்சரிக்கும் பொழுது இனிய நிகழ்வுகள் ஏராளமாக நடைபெறும். உங்கள் ராசிநாதன் சூரியன் சாரத்தில் சஞ்சரிப்பதால் சிக்கல்கள் விலகும். வம்பு வழக்குகள் வந்த வழியிலேயே செல்லும். வரன்கள் வாசல் தேடி வரும். அரசியல் களத்தில் உள்ளவர்களுக்கு அதிக பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகள் படிப்படியாய் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

ராகு-கேது பெயர்ச்சி!

மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் 8.10.2023 அன்று மீன ராசிக்கு ராகுவும், கன்னி ராசிக்கு கேதுவும் செல்கின்றார். இதுவரை குருவுடன் ராகு சேர்ந்திருந்தது. இப்பொழுது ராகு விலகி விட்டதால் குரு கூடுதல் பலம் பெறுகின்றார். எனவே அவரது பார்வைக்கு பலன் அதிகம் கிடைக்கும். அதே நேரம் 8-ல் ராகு சஞ்சரிப்பதால் இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்துசேரும். மறைந்த ராகுவால் நிறைந்த தனலாபம் உண்டு. எனவே பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். தேக்கநிலையில் இருந்த காரியங்கள் ஒவ்வொன்றும் துரிதமாக நடைபெறும். கேதுவின் சாரத்தில் ஆன்மிகப் பணிகளுக்கு அள்ளிக் கொடுப்பீர்கள். புதிய வாகனம் மற்றும் வீடு வாங்கும் யோகம் உண்டு. பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். அவர்களுக்கு உத்தியோகம் கிடைத்து அதன் மூலம் உதிரி வருமானங்களும் வரலாம். வீடு மாற்றங்களால் ஒருசிலர் நன்மை அடைவர்.

குருவின் வக்ர காலம்! (12.9.2023 முதல் 20.12.2023 வரை)

இக்காலத்தில் குரு பகவான் அசுவதி மற்றும் பரணி நட்சத்திரக் காலில் வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். நாடு மாற்றங்களும், வீடு மாற்றங்களும் ஏற்படலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. வீண் விரயங்கள் அதிகரிக்கும். விலை மதிப்புள்ள பொருட்களைக் கையாளும் பொழுது கவனம் தேவை. கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவது போல இருந்து கைநழுவிச் செல்லலாம். தனவரவில் தடைகள் ஏற்படலாம். தடுமாற்றங்கள் அகல இடமாற்றங்கள் கைகொடுக்கும். பிறருக்கு பொறுப்புச் சொல்வதால் பிரச்சினைகள் உண்டு.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!

சிம்ம ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி அற்புதப் பலன்களை அள்ளி வழங்கப் போகின்றது. அமைதியும், ஆனந்தமும் இல்லத்தில் குடிகொள்ளும். வருமானம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாக கிடைக்கும். கணவன்-மனைவி உறவில் பாசமும், நேசமும் அதிகரிக்கும். தாய் வழியிலும், உடன்பிறப்புகள் வழியிலும் ஓரளவு உதவி கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசை பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்களுக்குப் பல நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு இப்பொழுது கிடைக்கலாம்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு

இல்லத்து பூஜையறையில் கந்தப்பெருமான் படம் வைத்து கவசம் பாடி வழிபடுவது நல்லது. சனிக்கிழமை தோறும் விரதமிருந்து அனுமன் கவசம் பாடி அருகில் இருக்கும் அனுமன் ஆலயம் சென்று வழிபட்டு வந்தால் இனிய பலன்கள் இல்லத்தில் நடைபெறும்.


Next Story