ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்


ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 14 March 2023 6:45 PM GMT (Updated: 14 March 2023 6:45 PM GMT)

பங்குனி மாத ராசி பலன்கள் 15-03-2023 முதல் 13-04-2023 வரை

பிறரை பேச்சால் வசப்படுத்தும் வல்லமை பெற்ற ரிஷப ராசி நேயர்களே!

பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் விரய ஸ்தானத்தில் ராகுவோடு கூடி சஞ்சரிக்கிறார். அதுமட்டுமல்லாமல் விரயாதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கிறார். எனவே கடினமாக உழைத்தால் மட்டுமே தொழிலில் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. வியாபாரத்தில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படும். எதிலும் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படுவதன் மூலமே நிம்மதி கிடைக்கும். நிலையான வருமானத்தையும் கைப்பற்றிக் கொள்ள இயலும்.

செவ்வாயின் பார்வை சனியின் மீது பதிவது அவ்வளவு நல்லதல்ல. உங்கள் ராசிக்கு சப்தமாதிபதியாகவும், களத்திர ஸ்தானாதிபதியாகவும் செவ்வாய் விளங்குவதால் குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். குடும்ப விஷயங்களை மூன்றாம் நபரிடம் சொல்ல வேண்டாம். தேவையற்ற வீண் பேச்சுக்கள் குடும்ப முன்னேற்றத்திற்கு குந்தகம் விளைவிக்கும். வாழ்க்கைத் துணை பணிபுரியும் இடத்தில் மாறுதல் கேட்டு விண்ணப்பித்திருந்தால் இனிமை தராத மாறுதல்கள் கிடைக்கும். உழைப்பின் பயனை அடைய முடியாமல் சில இடையூறுகள் ஏற்படலாம். அசையா சொத்துக்கள் வாங்கும் பொழுது பத்திரங்களை சரிபார்த்து வாங்குவது நல்லது. விரயங்களை சமாளிப்பது உங்களுக்கு கைவந்த கலையாகும்.

மேஷ - புதன்

பங்குனி 15-ந் தேதி, உங்கள் ராசிக்கு தனாதிபதியான புதன் விரய ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கிறார். எனவே விரயங்கள் கூடுதலாக இருக்கும். குடும்பச்சுமை அதிகரிக்கும். வரவு இல்லாமல் கூட சிலருக்கு செலவுகள் ஏற்படலாம். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கி, சங்கிலித் தொடர் போல கடன்சுமை அதிகரிக்கலாம். எனவே இக்காலத்தில் எதையும் திட்டமிட்டுச் செய்வதே நல்லது. வீட்டுச் செலவுகளில் தாராளம் காட்ட வேண்டாம். கட்டுப்பாடான வாழ்க்கையே வெற்றிக்கு வித்திடும். பஞ்சமாதிபதியாகவும், புதன் விளங்குவதால் பிள்ளைகளால் விரயங்கள் அதிகரிக்கலாம். அவர்களின் கல்விச் செலவு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்காகவும் செலவிடும் சூழ்நிலை உண்டு.

ரிஷப - சுக்ரன்

பங்குனி 24-ந் தேதி உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பதால் உடல்நலம் சீராகும். உற்சாகம் குடிகொள்ளும். கடன்சுமை குறைந்து கவலைகள் பறந்தோடும். அந்தஸ்து உயரும். அடுத்தவர்கள் மதிக்கும் அளவுக்கு வாழ்க்கை அமையும். செய்தொழிலில் மேன்மைபெற்று சிறப்புகள் தேடிவரும். கைதவறிப் போனவைகள் கச்சிதமாய் திரும்பிவரும். உத்தியோக உயர்வால் உள்ளம் மகிழ்வீர்கள். நற்செய்தியை சுமந்துகொண்டு நாளும் நண்பர்கள் வருவர்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் நடத்துபவர்கள் போட்டிகளை முறியடித்து வெற்றி காண்பர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாதக் கடைசியில் மகிழ்ச்சி தரும் தகவல்கள் கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு இல்லம் தேடி வரும். மாணவ-மாணவியர்களுக்கு விரும்பிய துறையில் மேற்படிப்பு அமையும். பெண்களுக்குப் பிள்ளைச் செல்வங்களால் பெருமை உண்டு. கணவன் - மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு விருப்ப ஓய்வுபெறும் சிந்தனை மேலோங்கும்.

பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:- மார்ச்: 18, 19, 22, 23, 29, 30, ஏப்ரல்: 2, 3.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.


Next Story