ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்


ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
x
தினத்தந்தி 10 April 2023 3:46 PM IST (Updated: 10 April 2023 4:08 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்தல் அளித்து இருக்கிறார்.

சென்னை,

ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானவர்கள் பணத்தை இழந்து, தங்கள் வாழ்வை மாய்த்து வருகிறார்கள். எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தமிழக சட்டசபையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி கடந்த 6-ந்தேதி, சட்ட மசோதாவை அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்கள். இதைத்தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு செய்தது.

இந்தநிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை கடந்த 23-ம் தேதி சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தாக்கல் செய்தார். இந்த மசோதா ஒரு மனதாக நிறைவேறியது.

இந்தநிலையில், 2-வது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதா கவர்னருக்கு அனுப்பப்பட்ட நிலையில் மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்தல் அளித்து இருக்கிறார். சட்டப்பேரவையில் கவர்னருக்கு எதிராக முதல்-அமைச்சர் தனி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கவர்னரின் ஒப்புதலை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டம் தடைச்சட்டம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது. ஆன்லைனில் ரம்மி விளையாடினால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை, அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

1 More update

Next Story