
உக்ரைன் மீதான போரில் ரஷியா நடத்துகிற தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலியாவது தொடர்கதை ஆகி வருகிறது. கடந்த 27-ந் தேதியன்று, கிரெமென்சுக் நகரில் வணிக வளாகம் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் அப்பாவி மக்கள் 18 பேர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக உக்ரைன் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று முன்தினம் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூடி அவசர ஆலோசனை நடத்தியது. அந்த கூட்டத்தில் இந்தியாவின் துணை நிரந்தர பிரதிநிதி ஆர்.ரவீந்திரா பேசினார். அவர், “உக்ரைன் மோதல்கள் நிறைய உயிரிழப்புகளையும், மக்களுக்கு குறிப்பாக பெண்கள், குழந்தைகள், வயதானோருக்கு சொல்ல முடியாத துயரங்களையும் ஏற்படுத்தி வருகிறது. பல லட்சம் பேர் வீடுகளை இழந்தனர், அண்டை நாடுகளுக்கு இடம் பெயரும் வலுக்கட்டாய நிலை உருவானது. இந்த மோதலில் நகர்ப்புற மக்கள் எளிய இலக்கு ஆகிறார்கள். உக்ரைன் நிலைமை, இந்தியாவுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தி வருகிறது” என கூறினார். உக்ரைன் போர் ஐரோப்பாவுடன் முடிந்துவிடவில்லை, அது உணவு, உரம், எரிபொருள் பாதுகாப்பு போன்றவற்றில் பெரும் கவலையை வளரும் நாடுகளில் ஏற்படுத்தி உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.






