
எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்தி வைப்பு
அரசியல் சாசனம் மீது நடந்த சிறப்பு விவாதத்தின்போது, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் மாநிலங்களவையில் பேசும்போது, அம்பேத்கர் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நேற்று இரு அவைகளும் முடங்கின.
இந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில் இரு அவைகளும் தொடங்கின. அப்போது, எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதனால், மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுகிறது என அதன் தலைவர் ஓம் பிர்லா கூறினார். இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையும் முடங்கியது. இதனால், அவையை அதன் தலைவர் ஜெகதீப் தன்கர் மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து அறிவித்து உள்ளார். இந்த விவகாரம் எதிரொலியாக, 2-வது நாளாக அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.






