ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சூரி!.. என்ன நடந்தது?

ரசிகர் ஒருவர் வருத்ததுடன் இட்ட பதிவிற்கு நடிகர் சூரி மன்னிப்பு கேட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி. இவரது நடிப்பில் சமீபத்தில் 'மாமன்' படம் வெளியானது. பிரசாந்த் பண்டிராஜ் இயக்கியிருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி தனது அடுத்த படமாக ‘மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் நடிகர் சுஹால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மீனவர்களின் படகு ரேஸை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ரசிகர் ஒருவர் நடிகர் சூரியை எக்ஸ் தளத்தில் டேக் செய்து, "அன்புள்ள சூரி அண்ணா, உங்கள் பட சூட்டிங் எங்கள் ஊரில் நடப்பது எங்களுக்கு மகிழ்ச்சியே இரவு நேர படப்பிடிப்பில் வேடிக்கை பார்க்க வரும் எங்கள் பகுதி மக்களிடம் உங்களது பவுசன்கர்கள் கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் தயாரிப்பு நிறுவனத்திடம் கொஞ்சம் சொல்லி வைக்கவும் நன்றிகள்" என பதிவிட்டு இருந்தார்.
அந்த பதிவிற்கு நடிகர் சூரி, "தம்பி, உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பில் ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இதை தயாரிப்புக் குழுவிடமும், பவுன்சர்ஸ் சகோதரர்களிடமும் தெரிவித்து இனி மிகுந்த கவனத்துடன் இருக்கச் சொல்கிறோம். எப்போதும் போல உங்கள் அன்பே எங்களுக்கு பலம். மீண்டும் நன்றி" என்று மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார்.






