தமிழ் சினிமாவை சீரழிக்கிறோமா?- இயக்குனர் பா.ரஞ்சித் ஆவேசம்

‘பைசன்' படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள்.
சென்னை,
பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் ‘பைசன்' படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள்.
இதில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசுகையில், ‘‘எனது ‘அட்டகத்தி' படத்தை காமெடியாக பார்த்தவர்கள், ‘மெட்ராஸ்' படத்தில் இருந்து தான் சில குறியீடுகளைப் பற்றி விமர்சித்தார்கள். ‘கபாலி', ‘காலா' படங்களில் விமர்சனங்கள் வெடித்தன.
ரஜினியை வைத்து சாதி படம் எடுக்கலாமா? இப்படிப்பட்ட வசனமெல்லாம் பேசவைக்கலாமா? நான் ஒரு சாதி வெறியன் என்றெல்லாம் என்னை பேசினார்கள். எங்கள் மூன்று பேரையும் தமிழ் சினிமாவைச் சீரழிக்கும் இயக்குனர்கள் என்கிறார்கள்.
ஒரு வருடத்துக்கு 400 படங்கள் தமிழில் வருகின்றன. நாங்கள் எடுக்கும் படங்கள் தான் சினிமாவைச் சீரழிக்கின்றதா? இதுபோன்ற கேள்விகளுக்கான பதிலை தேடுவதுதான் எங்கள் சினிமா. ‘பைசன்' படம் வருவதற்கு முன்பாகவே இது சாதி படம் போகாதீங்க. ‘டியூட்' படத்துக்கு போங்க என்றெல்லாம் வெறுப்புணர்வைப் பரப்பினார்கள். இதை நம்பி ‘டியூட்' படத்துக்கு போனவர்களை அதன் டைரக்டர் கீர்த்தீஸ்வரன் வச்சு செஞ்சுட்டாருல்ல...'', என்றார். ‘டியூட்' படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் படத்தின் வசூல் ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.






