அசோக் செல்வன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

மணிகண்டன் ஆனந்தன் இயக்கத்தில் அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடித்த புதிய படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.
சென்னை,
தமிழில் 'சூதுகவ்வும்' படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் அசோக் செல்வன். நித்தம் ஒரு வானம், சில நேரங்களில் சில மனிதர்கள், ஹாஸ்டல், மன்மத லீலை உள்ளிட்ட படங்களில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
‘தக் லைப்’ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்துவருகிறார். இதில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக பிரீத்தி முகுந்தன் நடிக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடிகர் அசோக் செல்வனின் புதிய படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இந்த படத்தை இயக்கியுள்ளார். கதைக்களத்தின் தேவைக்கேற்ப, பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களில் படமாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது பின்னணி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வரும் நாட்களில் வெளியாகவுள்ளன.






