“திரிஷ்யம் 3” படத்தை முதலில் பார்க்க மலையாள ரசிகர்களே தகுதியானவர்கள் - இயக்குநர் ஜீத்து ஜோசப்

மோகன்லால் நடிக்கும் ‘திரிஷ்யம் 3’ படப்பிடிப்பு பூஜை கடந்த செப்டம்பர் 22ம் தேதி நடைபெற்றது.
கடந்த 2013-ம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான படம் ‘திரிஷ்யம்’. ரூ.5 கோடி செலவில் தயாரான இப்படம் ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க 'பாபநாசம்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர் ‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. இது நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
‘திரிஷ்யம்’ 3ம் பாகம் உருவாகி வருகிறது. ‘திரிஷ்யம் 3’ படப்பிடிப்பு பூஜை கடந்த செப்டம்பர் 22ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் ‘திரிஷ்யம் 3 ’ திரைப்படத்தை முன்பு போலவே முதலில், மலையாளத்தில் வெளியிடுவோம் என்று இயக்குநர் ஜீது ஜோசப் தெரிவித்துள்ளார். “மலையாளப் பார்வையாளர்கள் தொடக்கத்தில் இருந்தே இப்படத்தின் கதாபாத்திரமான ஜார்ஜ்குட்டியுடன் வாழ்ந்திருக்கிறார்கள். அவரது கதை எப்படி முடிகிறது என்பதை வேறு எவருக்கும் முன்பாகப் பார்க்க அவர்கள் தகுதியானவர்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.






