“மங்காத்தா” ரீ-ரிலீஸ் குறித்து இயக்குநர் வெளியிட்ட அப்டேட்

‘மங்காத்தா’ படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரீ-ரிலீஸ் கலாச்சாரத்தை ரசிகர்கள் பெரிதும் விரும்புகின்றனர் என்பதற்கு சான்றாக இருக்கிறது சமீபத்திய ரீ-ரிலீஸ் படங்களின் வசூல். படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன நிலையிலும், பலமுறை தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பானதை ரசித்த ரசிகர்கள், திரையரங்குகளிலும் 'கில்லி' ரீ-ரிலீஸைக் கொண்டாடி வருகின்றனர். படம் வெளியான சில நாட்களிலேயே ரூ. 12 கோடி வசூலைக் கடந்திருக்கிறது கோலிவுட்டை ஆச்சரியப்படுத்தியுள்ளது. புதுப்படங்களுக்கு இணையாக ரீ-ரிலீஸ் படங்களின் வசூலும் மாஸ் காட்டி வருகிறது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த 2011ல் வெளியான ‘மங்காத்தா’ படத்தில் நீண்ட நாட்கள் கழித்து நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார் நடிகர் அஜித். திரை வாழ்க்கையில் சிறிய பின்னடைவைச் சந்தித்த நடிகர் அஜித்துக்கு ‘மங்காத்தா’ படம் பெரும் 'கம்பேக்'காக அமைந்தது. அதற்கு காரணம் அஜித்தின் கதாபாத்திரமும், பின்னணி இசையும் தான். கதாநாயகனாக அஜித்தை கொண்டாடிய ரசிகர்கள் எல்லாம் வில்லனாக கொண்டாட வைத்த படம் ‘மங்காத்தா’. அஜித் வரும் காட்சிகள் முழுவதும் பின்னணி இசையில் யுவன்சங்கர் ராஜா அதிர வைத்திருப்பார். ஸ்டண்ட் காட்சிகளும், அஜித் ஒற்றை வீலில் பைக் ஓட்டும் காட்சிகள் மக்களை பிரமிக்க வைத்தது.
இந்நிலையில், ‘மங்காத்தா’ படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் கிங்மேக்கர் என்று பதிவிட்டுள்ளார்.






