எனது கணவர் நலமுடன் இருக்கிறார் - நடிகை ஹேமமாலினி பரபரப்பு பதிவு

பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானதாக இன்று காலை செய்திகள் வெளியாகின.
மும்பை,
இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவுக்கு, 89 வயது ஆகிறது. கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால், மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியது. அத்துடன் இவரது மறைவிற்கு பலரும் இரங்கலை தெரிவித்தனர்.
ஏற்கனவே தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கு அவரது குடும்பம் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் தர்மேந்திரா உயிருடன் இருப்பதாக அவருடைய மனைவியும் நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலினி தனது எக்ஸ் பக்கத்தில் பரபரப்பான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நடப்பது மன்னிக்க முடியாதது! சிகிச்சைக்கு பதிலளித்து குணமடைந்து வரும் ஒரு நபரைப் பற்றி பொறுப்புள்ள சேனல்கள் எப்படி பொய் செய்திகளை பரப்ப முடியும்? இது மிகவும் அவமரியாதையான மற்றும் பொறுப்பற்ற செயல். எங்கள் குடும்பத்தினரின் தனியுரிமைக்கு உரிய மரியாதை கொடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
அவரைத்தொடர்ந்து தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "என் தந்தை நலமுடன் உள்ளார், குணமடைந்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார்.






