ரவி மோகனின் “புரோ கோட்” பட வழக்கு - உயர்நீதிமன்ற உத்தரவு நீட்டிப்பு

‘புரோ கோட்’ பெயரை பயன்படுத்துவதைத் தடுக்கக் கூடாது என மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு விதித்த இடைக்கால உத்தரவை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகர் ரவி மோகன், கார்த்திக் யோகி இயக்கத்தில் ’புரோ கோட்’ என்ற பெயரில் படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இந்த தலைப்புக்கு எதிராக, இதே பெயரில் மதுபானம் தயாரித்து வரும் இண்டோ-ஸ்பிரிட் பெவரேஜஸ் என்ற நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வணிகச்சின்ன மீறல் தொடர்பாக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ‘புரோ கோட்’ தலைப்புக்கு இடைக்கால தடை விதித்தது.
‘புரோ கோட்’ படத்தின் தலைப்பை, தனது படத்துக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கக்கூடாது என டெல்லியைச் சேர்ந்த மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி ரவி மோகன் ஸ்டூடியோஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் திரைப்படத்துக்கு ‘புரோ கோட்’ பெயரை பயன்படுத்துவதைத் தடுக்கக் கூடாது என டெல்லியைச் சேர்ந்த மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை மீறி செயல்படுவதாக டெல்லி மதுபான நிறுவனத்திற்கு எதிராக ரவி மோகன் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை டிசம்பர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை இடைக்கால உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டார்.






