வடிவேலுவிடம் இருந்த எளிமையும், எதார்த்தமும் போய்விட்டது - பாரதி கண்ணன்

பாரதி கண்ணன் இயக்கிய ‘கண்ணாத்தாள்’ படத்தில் வடிவேலு நடித்த ‘சூனா பானா’ கதாபாத்திரம் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி, நகைச்சுவையில் கலக்கியவர் வடிவேலு. பல ஆண்டுகளாக அசைக்க முடியாத இடத்தில் இருந்த அவர், அரசியல் ரீதியான விமர்சனங்களைத் தெரிவித்தது, நாயகனாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்தது போன்ற விஷயங்களால் சில ஆண்டுகள் நடிக்கும் வாய்ப்பை இழந்து போனார்.
தற்போது மீண்டும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ‘மாமன்னன்’, ‘மாரீசன்’ போன்ற படங்களில் வித்தியாசனமான நடிப்பையும், ‘கேங்கர்ஸ்' படத்தில் நகைச்சுவை நடிப்பையும் அற்புதமாக வெளிக்காட்டியிருந்தார்.
இவர் ஆரம்ப காலத்தில் பாரதி கண்ணன் இயக்கிய ‘கண்ணாத்தாள்’ படத்தில் வடிவேலு நடித்த ‘சூனா பானா' கதாபாத்திரம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் இயக்குனர் பாரதி கண்ணன், வடிவேலுவைப் பற்றி கூறிய விஷயம் ஒன்று வைரலாகி இருக்கிறது. அதில், “ஆரம்ப காலத்தில் நாங்கள் பார்த்த வடிவேலு வேறு. இப்போது இருக்கும் வடிவேலு வேறு. அந்த காலத்தில் வடிவேலு, லுங்கி கட்டி, பீடி பிடித்தபடி எதார்த்தமாக நடித்து இருப்பார். அனைவரும் மக்களில் ஒருவராக அவரைப் பார்த்தார்கள். ஆனால் இப்போது அவர் நடிக்கும் படங்களில் ஹாலிவுட் ஆர்ட்டிஸ்ட் போல, காரில் இறங்கி, ஷூவைக் காட்டி பில்டப் ஏற்றி வருகிறார். அது எப்படி மக்களின் மனதில் ஒட்டும்” என்று கேட்டுள்ளார்.
சமீபத்தில் நடிகர் கார்த்திக் பற்றி, பாரதி கண்ணன் சொன்ன ஒரு விஷயம் விமர்சனத்திற்கு உட்பட்டது குறிப்பிடத்தக்கது.






