அஷ்டமி சிறப்பு வழிபாடு... கால பைரவருக்கு அபிஷேக ஆராதனை

சிவன் கோவில்களில் அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு ஆனி மாத அஷ்டமியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், கரும்பு சாறு, தேன், விபூதி உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர், பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், மேகபாலீஸ்வரர், பாகவல்லி அம்பிகை மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் சேமங்கியில் உள்ள மங்களநாதர் சமேத கமலாம்பிகை கோவிலில் உள்ள காலபைரவர், புன்னம் சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள கால பைரவர், குந்தாணி பாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேஸ்வரன் கோவில் உள்ள காலபைரவர் மற்றும் நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு ஆனி மாத அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவரை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.