அவிநாசி தேர்த்திருவிழா: நாளை பெரிய தேரோட்டம்

அவிநாசிலிங்கேஸ்வரர் தேர், தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள புகழ்பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான பெரிய தேரோட்டம் நாளை தொடங்குகிறது. நாளை காலையில் அவிநாசியப்பர் திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டு, வடக்கு ரத வீதியில் நிறுத்தப்படுகிறது. பின்னர் நாளை மறுநாள் (9-ம் தேதி) காலை 8 மணிக்கு திருத்தேர் மீண்டும் வடம் பிடித்து இழுக்கப்பட்டு, நிலைக்கு கொண்டு வரப்படுகிறது.
அதன்பின் 10-ம் தேதி காலை கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், கரிவரதராஜ பெருமாள் ஆகிய திருத்தேர்கள் வடம்பிடித்து இழுக்கப்படுகின்றன.
பிரமிக்க வைக்கும் அவிநாசிலிங்கேஸ்வரர் திருத்தேரானது தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என்ற சிறப்பை பெற்றுள்ளது. மொத்தம், 95 அடி உயரம் கொண்ட இத்தேர் முழுவதும் இலுப்பை மரத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர் 300 டன் எடை கொண்டது. முதன்முதலாக, இரும்பு சக்கரம் பொருத்திய தேர் என்ற பெருமை பெற்றது.