திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது

திருவல்லிக்கேணியில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், 19-ந் தேதி நடைபெறும்.
சென்னை,
சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது பார்த்தசாரதி கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவிலில் கிருஷ்ண பரமாத்மா நின்ற கோலத்தில் வேங்கடகிருஷ்ணன் என்ற திருநாமத்துடன், தனது தேவியார் ருக்மணி பிராட்டி, மகன் பிருத்யும்னன், பேரன் அநிருத்தன், தம்பி சாத்யகி என குடும்ப சகிதமாக சேவை சாதிக்கிறார்.
குருஷேத்திரப் போரில் பார்த்தனுக்கு (அர்ஜுனன்) தேரோட்டியாக பங்கேற்றார் கிருஷ்ணர். அப்போது அர்ஜுனன் மீது எய்தப்பட்ட அம்புகளை தன் மீது தாங்கியதால் அவரது முகத்தில் வடுக்கள் ஏற்பட்டன. இந்த வடுக்களை இங்குள்ள உற்சவர் திருமுகத்தில் காணலாம்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவம் சித்திரை மாதமும், இங்கு மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் ஆனி மாதமும் விமரிசையாக நடந்து வருகிறது.
பிரம்மோற்சவ விழா
அந்த வகையில், பார்த்தசாரதி பெருமாளுக்கான சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளில் புன்னைமர வாகனத்தில் பார்த்தசாரதி சாமி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
2-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) காலை பரமபதநாதன் திருக்கோலத்தில் சேஷ வாகன வீதி உலா நடைபெற்றது. இரவு 7.45 மணிக்கு சிம்ம வாகன வீதி உலா நடைபெறுகிறது. நாளை (15-ந்தேதி) (செவ்வாய்க்கிழமை) 3-ம் நாள் திருவிழாவில் காலை 5.15 மணிக்கு கருடசேவையும்- கோபுரவாசல் தரிசனமும் நடக்கிறது.
தேரோட்டம்
விழா நாட்களில் சூரிய பிரபை, சந்திர பிரபை, பல்லக்கு நாச்சியார் திருக்கோலத்தில் பல்லக்கு சேவை, சூர்ணாபிஷேகம், யானை வாகனங்களில் வீதி உலா, வெண்ணெய்த்தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவையில் பெருமாள் அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்வான தேரோட்டம், 19-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 5 மணிக்கு பெருமாள் திருத்தேரில் எழுந்தருள்கிறார். காலை 7 மணி அளவில் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது.
வருகிற 21-ந்தேதி காலை 6.15 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், அன்று இரவு 7.45 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவையும் நடக்கிறது. வருகிற 23-ந்தேதியில் இருந்து மே மாதம் 2-ந்தேதி வரை விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது.