உடலில் சேற்றை பூசி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

சேற்றை உடல் முழுவதும் பூசிக் கொண்டால் அந்த மண்ணில் உள்ள நுண் சத்துக்கள் உடலுக்கும் கிடைக்கும் என்பது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
விளாத்திகுளம் அருகே உள்ள சோழபுரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 13-ம் தேதி தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான சேற்றுத் திருவிழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், சிறுவர்கள் தங்களது உடல் முழுவதும் சேற்றைப் பூசிக் கொண்டு, கைகளில் வேப்பிலையை ஏந்தியவாறு ஊரிலுள்ள பொது கண்மாயில் இருந்து தொடங்கி கிராமம் முழுவதும் சுற்றி இறுதியில் கோவிலை வந்தடைந்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசனம் செய்தனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சேற்றை உடல் முழுவதும் பூசிக் கொண்டால் அந்த மண்ணில் உள்ள நுண் சத்துக்கள் உடலுக்கும் கிடைக்கும் என்பதும், கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் நோய் ஏதும் வராது என்றும் சேற்றுத் திருவிழா ஆரம்பிக்கப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.