விடுமுறை தினம்: திருச்செந்தூரில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்

தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்
சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அதேபோல் திருவிழா நாட்கள், விடுமுறை தினங்கள் மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அவ்வகையில் பௌர்ணமி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதியம் 2 மணிக்கு சாயரட்ச்சை தீபாராதனையும், 3 மணிக்கு ராக்கால அபிஷேகமும் நடந்தது. மாலை 5 மணிக்கு பள்ளியறை பூஜைக்கு பின்னர் நடை திருகாப்பிடப்பட்டது.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் தரிசன வரிசை மற்றும் பொது தரிசன வழிகளில் மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம், பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை என அனைத்து பகுதிகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.






